'ராமாயணத்தை படமாக்க கூடாது, அதற்கு பதிலாக...'- பாலிவுட் நடிகை

மகாபாரதம், ராமாயணம் போன்ற மாபெரும் காவியங்களை படமாக்க கூடாது என்று நடிகை தீபிகா சிக்லியா கூறினார்.
'Ramayanam should not be filmed, instead...'- Bollywood actress
Published on

சென்னை,

ராமாயண கதை ஏற்கனவே ஆதிபுருஷ் என்ற பெயரில் படமாக வந்தது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்து இருந்தனர்.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. நிதிஷ் திவாரி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் ராமானந்த சாகர் இயக்கத்தில் வெளியான ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்து புகழ்பெற்ற தீபிகா சிக்லியா ராமாயணத்தை படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் நிறைய இந்தி படங்களிலும் தமிழில் பெரிய இடத்து பிள்ளை, நாங்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தீபிகா சிக்லியா கூறும்போது, "ஆதி புருஷ் படத்தில் ராமாயணத்தின் பெருமை சிறுமைப்படுத்தப்பட்டு விட்டது. புதுமையாக ஏதோ காட்ட வேண்டும் என்ற முயற்சியில் ராமாயணத்தின் பெருமையை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்திய புராண காவியங்களான மகாபாரதம், ராமாயணம் போன்ற மாபெரும் காவியங்களை படமாக்க கூடாது. அதற்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர தீர போராட்டம், தியாகங்களை படமாக எடுத்து வெளியிடலாம்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com