

சென்னை,
நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் ‘புரோ கோட்'. கார்த்திக் யோகி என்பவர் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ‘டீசர்' கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி வெளியானது. இந்த நிலையில், புரோ கோட் என்ற பெயருக்கு, தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால், அதை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த இண்டோ பேவ்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற மதுபான நிறுவனம் தரப்பில், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்த ரவி மோகன், இந்த பட விவகாரத்தில் தலையிட மதுபான நிறுவனத்துக்கு எதிராக தடை உத்தரவு பெற்றார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் ஆஜரான வக்கீல்கள், இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினர். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.