18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்... விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

'கட்டா குஸ்தி-2' படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்... விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி
Published on

சென்னை,

ஐசரி கணேஷ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், லிசி ஆண்டனி, முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த 'கட்டா குஸ்தி-2' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று 'ஹிட்' படமாக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் வெற்றி விழாவை கொண்டாடினர்.

'18 ஆண்டு உழைப்புக்கான வெகுமதி'

வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், "பல இடங்களில் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக நான் செய்த உழைப்புக்கான வெகுமதி இப்போது கிடைத்தது போன்ற உணர்வு இருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

குடும்ப பொழுதுபோக்கு படங்களுக்கு வரவேற்பு

தொடர்ந்து அவர் பேசுகையில், "தற்போது குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்கள் குறைந்துவிட்டன. அப்படிப்பட்ட சூழலில் 'கட்டா குஸ்தி-2' போன்ற படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வர வேண்டும். பல படங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். சொன்ன கதாபாத்திரங்களையும் வழங்க மாட்டார்கள். அப்படி செய்யக்கூடாது. ஒருவருக்கு கொடுத்த சத்தியத்தையும் வாக்குறுதியையும் எப்போதும் காப்பாற்ற வேண்டும். அதுதான் தொழில்முறை நேர்மை" என்று வலியுறுத்தினார்.

'ஒவ்வொரு வெற்றியும் புதிய நம்பிக்கை' - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், "ஒரு நடிகராக எப்போதும் போராடிக்கொண்டே இருப்போம். ஆனால் வெற்றி என்பது அவ்வப்போது மட்டுமே கிடைக்கும். அதனால் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது. இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com