

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘அமரன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘சேயோன்’. ‘தாய் கிழவி’ படப்புகழ் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.
மதுரை மண்ணின் பாரம்பரியப் பின்னணியைக் கொண்ட ஒரு பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி இப்படத்தில் இணைந்துள்ளார்.
தற்போது விரிவான இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, முக்கிய ஆக்சன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், சீமான் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் தொடங்கியுள்ள இதன் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘எல்ஐகே’ படத்தில் சீமான் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சீமானின் கதாபாத்திரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.