

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், தனது 40வது திருமண நாளை மனைவி கீதாவுடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சிவராஜ்குமார் தமிழில் ஜெயிலர் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கெளதம் சிவராமன் இயக்கும் இந்தப் படத்தில் கானா வினோத், ஷிவானி நகரம் மற்றும் யோக லட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று தனது 40வது திருமண நாளை படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடினார் சிவராஜ்குமார். இந்த நிகழ்வில் அவரது மனைவி கீதாவும் கலந்து கொண்டார். இருவரும் இணைந்து கேக் வெட்டி திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சிவராஜ்குமார் - கீதா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நான்கு தசாப்தங்களாக நீடித்து வரும் இவர்களின் திருமண வாழ்க்கைக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.