

சென்னை,
அசத்தலான நடிப்பால் தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் ஷ்வேதா திவாரி. 44 வயதிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், ‘கசௌட்டி ஜிந்தகி கய்’ தொடரில் ‘ப்ரேர்ணா’ கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிறந்த ஷ்வேதாவுக்கு இந்த உயரத்தை அடைவது எளிதாக இருக்கவில்லை. பல ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கைதான். சிறு வயதிலேயே ஒரு டிராவல் ஏஜென்சியில் மாதம் ரூ.500 சம்பளத்தில் தனது முதல் பணியை தொடங்கினார். பின்னர் 15 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புலகில் காலடி எடுத்து வைத்தார்.
சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்த பிறகு அவரது வாழ்க்கை முழுமையாக மாறியது. ஏக்தா கபூரின் பிரபல தொடர் ‘கசௌட்டி ஜிந்தகி கய்’ அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக மாற்றியது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்து அந்த தொடரில் நடித்த அவர், தொலைக்காட்சி ரசிகர்களின் மிகவும் பிரியமான நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு ‘மேரே டாட் கி துல்ஹன்’, ‘கஹானி கர் கர் கி’, ‘பால் வீர்’ போன்ற பல ஹிட் தொடர்கள் அவரது வெற்றியை மேலும் உயர்த்தின.
ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் ஆதிக்கம் செலுத்தினார். இந்தி‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளராக திகழ்ந்து, வாரத்திற்கு ரூ.5 லட்சம் வருமானம் பெற்றார். இன்று ஷ்வேதா திவாரி தொலைக்காட்சி துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஒரு எபிசோடுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார். இவருக்கு சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். மாதம் ரூ.500 சம்பளத்தில் தொடங்கிய அவரது வாழ்க்கை பயணம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது மும்பையின் காந்திவலி பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.