'சூர்யவம்சம் 2' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் - இயக்குனர் ராஜகுமாரன்

சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த 1997-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'சூர்யவம்சம்'. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா - மகன் என இருவேடங்களில் உருவான அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் தேவயானி, ராதிகா, பிரியாராமன், நிழல்கள் ரவி, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனந்த்ராஜ் இந்த படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகை நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் நடந்த பேட்டியில் சூர்யவம்சம் 2 படம் குறித்து பேசி உள்ளார். அதாவது, "சூர்யவம்சம் மக்களிடையே வரவேற்பை பெற்று ஹிட் அடித்த படம். இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். சூர்யவம்சம் படத்தில் சரத்குமார் – தேவயானிக்கு 'சக்திவேல்' என்ற ஒரு மகன் கதாபாத்திரம் இருக்கிறது. அந்த கேரக்டரில் இப்போது சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






