

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படமான கில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை பாலவாக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்தது. ரோப் கயிறு உதவியுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சண்டைக் காட்சியில் நடித்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் கம்பி மீது விழுந்ததில் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சைக்கு பிறகு 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விபத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.