“டியூட்” படம் குறித்து சிலருக்கு மாற்று கருத்து உள்ளது, ஆனால்... - பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘டியூட்’. இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் முன்னனி நடிகையான மமிதா பைஜு நடித்துள்ளார்.
காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ‘டியூட்’ படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “இந்தப் படம் நிறைய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. ஒரு சிலருக்கு படம் குறித்து மாற்று கருத்துகள் உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது படம் அவர்களுக்கும் பிடித்துவிடும். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன். மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது.” என்று தெரிவித்தார்.






