

அபராஜித் பிலிம் நிறுவனம் சார்பில் கணேஷ் ரகு தயாரித்து, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மவுனம் பேசியதே' படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி 'ஹிட்' அடித்தது. 24 வருடங்களுக்கு பிறகு இந்த படம் காதலர் தினத்தையொட்டி மீண்டும் ரிலீசுக்கு வந்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
‘மவுனம் பேசியதே’ ரீ-ரிலீஸ்க்கு சூர்யா-அமீர் இருவரும் சந்தித்து கொண்டார்கள். பல வருடங்களுக்கு பின் இருவரும் சந்தித்து கொண்டதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் கணேஷ் ரகு தயாரிப்பில் அமீர் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க போகிறாராம். இதுகுறித்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேவேளை இது மவுனம் பேசியதே படத்தின் அடுத்த பாகமா? என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்திவீரன்', 'ஆதி பகவன்' படங்களை இயக்கிய அமீர், 2013-ம் ஆண்டுக்கு பிறகு படங்கள் இயக்கவில்லை. அந்தவகையில் அமீர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுப்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.