

'சிறை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் எல்.கே.அக்ஷய் குமார் கவனம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்குனர் சுரேஷ் ராஜ்குமாரி இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எல்.கே.அக்ஷய் குமார், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
‘சிறை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எல்.கே.அக்ஷய் குமார் தற்போது 'ராவடி' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘சிறை’ படம் 50-வது நாளை எட்டியதை முன்னிட்டு, ‘ராவடி’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் எல்.கே.அக்ஷய் குமார் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.