

ஆரம்ப காலத்தில் ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்தவர், ஆர்.ஜே. பாலாஜி. இவர் திரைத்துறைக்கு வந்த பின், நடிகராக மட்டுமின்றி, சில படங்களை இயக்கும் அளவுக்கு வளர்ந்தார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவை வைத்து 'கருப்பு' என்ற பிரமாண்ட படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஆர்.ஜே. பாலாஜி ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் பல மீடியாக்களுக்கு பேட்டிகளை அளித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறும்போது, "ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' முதல் பாகத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி வசனம் எழுதினார். அவர் என்னை அழைத்து, இந்தப் படத்தில் ராணா டகுபதியின் மகனாக நடித்துள்ள அதிவி சேஷ்க்கு குரல் கொடுக்க வேண்டும் என்று ராஜமவுலி கேட்டதாக கூறினார். அதைக் கேட்டதும் நான் மகிழ்ச்சியாகி விட்டேன்.
ஆனால் இரண்டு நாள் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்ட மதன் கார்க்கி, 'உங்கள் குரல் மிகவும் பிரபலம். இது ஆர்.ஜே. பாலாஜியின் குரல் என்று படம் பார்ப்பவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள். அது படத்தின் போக்கை தடுமாறச் செய்யும் என்ற காரணத்தால், நீங்கள் வேண்டாம் என்று ராஜமவுலி கூறிவிட்டார்' என்று என்னிடம் சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் ராஜமவுலி சார் யோசித்த அந்த லாஜிக் சரியான ஒன்றுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன்" என்றார்.