

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரின் வாக்குரிமையைத் தடுக்க முடியும் என்றாலும், அந்த அதிகாரத்திற்கு எதிரான மக்களின் குரலைத் தடுக்க முடியுமா என்று நடிகர் பிரகாஷ் ராஜ்கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக உள்ளது. அதன்பிறகு பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அதன்மீதான நடவடிக்கை ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 22 வரை நடைபெறும். பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்குப் பிறகு பெங்களூரு தொகுதியில் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் இந்தத் தொகுதியில்தான் பிறந்தேன். இந்தத் தொகுதியில்தான் வாழ்ந்தேன். எனது பள்ளிப்படிப்பு, கல்லூரி, நாடகம் எல்லாமே இங்குதான். நான் இந்தத் தொகுதியின் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறேன்.
எனது வாக்காளர் அடையாள அட்டையை மீண்டும் பெற நான் என்னென்ன நடைமுறைகளை கடக்க வேண்டும் என்று பார்க்கிறேன். உங்களை தேர்ந்தெடுக்காத மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்கலாம். ஆனால் உங்களை வீழ்த்துவதற்கான எங்கள் மக்கள் சக்தியை தடுக்க முடியாது” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது பாஜகவினருக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் பிரகாஷ் ராஜூம் அதனை முன்வைத்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கறிஞர் திலீப் குமார் சார்பில் பெங்களூர் 48 வது கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் நேரில் ஆஜரானதால் ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பெங்களூரில் தனது வாக்குரிமை பறிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நீட் முறைகேடு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.