பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) காலமானார்

மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) காலமானார்
Published on

மும்பை

பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுவாச பிரச்சினை இருந்ததால், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷா போஸ்லேயின் மறைவுச் செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதிசெய்துள்ளார். மேலும் அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

குறிப்பாக இந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி உள்ளார். தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற 'செண்பகமே, செண்பகமே', ஹேராம் படத்தில் இடம்பெற்ற 'நீ பார்த்த பார்வை' , அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற ‘செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்’ , சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘கொஞ்சநேரம்.. கொஞ்சநேரம்’ உள்ளிட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

மத்திய அரசின் பத்ம விபூஷண் விருதை ஆஷா போஸ்லே பெற்றுள்ளார். ஆஷா போஸ்லே மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆவார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com