

இந்திய திரை உலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் ராஜமவுலி. அவரது இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபுவை வைத்து ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் இயக்குனர் ராஜமவுலியும், நடிகர் மகேஷ்பாபுவும் ஒருவொருக்கொருவர் சரமாரியாக மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சில தினங்களாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களும் எழுந்தன.
இந்நிலையில் வீடியோ குறித்து ஆய்வு செய்த போது இருவரும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி வீடியோ காட்சிகள் என தெரிய வந்துள்ளது. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராஜமவுலி-மகேஷ்பாபு வீடியோ காட்சிகள் போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியானதற்கு பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல இயக்கனநர் ராம்கோபால் வர்மா இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து சினிமா இறந்து விட்டது என ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.