

மும்பை,
நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான சுருதி ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் தோற்றத்தை அவரது அனுமதியின்றி சிலர் வணிக நோக்கத்தில் பயன்படுத்தி வந்தனர். மேலும் அவரது டீப்பேக் மற்றும் போலி ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. இதனை எதிர்த்து சுருதிஹாசன் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த உள்ளடக்கங்களை நீக்கக்கோரியும், ரூ.15 கோடி இழப்பீடு கோரியும் கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட 18 நிறுவனங்களுக்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சுருதிஹாசனின் நற்பெயருக்கும். கண்ணியத்துக்கும் இந்த டீப் பேக் வீடியோக்கள் ஈடுசெய்ய முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இணையத்தில் ஒருமுறை பரவும் இத்தகைய போலி வீடியோக்கள், தொடர்ந்து பலரால் பகிரப்படுவதால் அவரது தனிப்பட்ட உரிமைகள் நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றன. இதற்கு வெறும் பணத்தை மட்டும் இழப்பீடாக வழங்க முடியாது.
எனவே, சுருதிஹாசன் தொடர்பான அனைத்து டீப்பேக், போலி ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.