

நடிகை தீபிகா படுகோனை ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து நீக்க பல்வேறு காரணங்கள் இருந்ததாக தயாரிப்பாளர் பிரணய் வங்கா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்பிரிட்’. இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பாக சந்தீப் வங்காவின் சகோதரர், டி சீரிஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுடன், கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க தொடக்கத்தில் தீபிகா படுகோன் தேர்வாகி இருந்தார். பின்னர் அவரது அதிகப்படியான நிபந்தனைகளால் அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் தீபிகா படுகோனுக்குப் பதிலாக ‘அனிமல்’ படத்தில் கவனம் பெற்ற திரிப்தி டிம்ரி தேர்வானார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து நீக்க பல்வேறு காரணங்கள் இருந்ததாக தயாரிப்பாளர் பிரணய் வங்கா விளக்கம் அளித்துள்ளார். அதில் “நடிகை தீபிகா படுகோன் நடிப்பு பிடித்ததாலேயே அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். அவருடன் ஓராண்டாகவே சந்தீப் பேசி வந்தார். நல்ல உறவிலும் இருந்து வந்தார். திடீரென அவர் அதிகமான சம்பளத்தைக் கேட்கிறார். பின்னர், குறைவான நேரம் மட்டுமே நடிப்பேன் என்கிறார். அடுத்ததாக, படத்தின் வெற்றியில் 10 சதவிகிதம் வேண்டும் என்கிறார். தீபிகாவின் நடவடிக்கைகள் சந்தீப்பிற்கு பிடிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கினார்” என்றார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, அதிக சம்பளம், மற்றும் படத்தின் லாபத்தில் பங்கு உள்ளிட்ட அவரது கோரிக்கைகளால் படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் திரைக்கு வர உள்ளது. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘ராக்கா’ படத்தில் தீபிகா படுகோனே நடித்துவருகிறார்.