தமிழக-கேரள எல்லையில் வாகன தணிக்கை செய்த தேனி கலெக்டர்

தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
தமிழக-கேரள எல்லையில் வாகன தணிக்கை செய்த தேனி கலெக்டர்
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது.

இதனால், கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் மலைப்பாதைகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்யப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்துள்ளார்களா? கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்து இருக்கிறார்களா? என தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி சோதனை சாவடியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு முறையான பரிசோதனை செய்யப்படுகிறதா? என்று பார்வையிட்டதுடன், சோதனை சாவடியில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அந்த வழியாக வந்த வாகனங்களையும் நிறுத்தி கலெக்டர் வாகன தணிக்கை செய்தார். ஆய்வின்போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com