விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் புகார்தாரர்கள்

திருச்சி மாநகரில் புகார்தாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாமல் தவித்துவருகிறார்கள்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் புகார்தாரர்கள்
Published on

திருச்சி, ஆக.29-
திருச்சி மாநகரில் புகார்தாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாமல் தவித்துவருகிறார்கள்.
சைபர் கிரைம் குற்றங்கள்
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கடந்த மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு சைபர்கிரைம் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வருகின்றன. சிறிய புகார் முதல் பெரிய புகார்கள் என்று இதுவரை 120-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
இவற்றில் 6 புகார்கள் மீது மட்டுமே இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. காரணம், பலர் புகார் கொடுத்த பின்னர், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பதில்லை என்று போலீசார் புலம்பி தவிக்கிறார்கள்.
இதுபற்றி மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதியிடம் கேட்டபோது கூறியதாவது:-
6 வழக்குகள் பதிவு
மாநகர சைபர் கிரைம் போலீஸ் முழுமையாக செயல்பட தொடங்கி 2 மாதங்கள் தான் ஆகிறது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் செய்பவர்களில் பலர், இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர்கள் குறித்த தவறான தகவல்களை நீக்கினால் போதும் என்று கூறிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஒரு சில சம்பவங்களில் குறைந்த அளவு ரூ.100 முதல் ரூ.1000 வரை பணத்தை பறிகொடுத்த பலர் புகார் குறித்து விசாரிக்க சம்மன் அனுப்பி அழைத்தால் வருவதில்லை. இதனால் பல புகார் மனுக்கள் புகார் அளவிலேயே உள்ளன. அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடிவதில்லை. பொதுமக்கள் வங்கி கணக்கு, செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. போன்ற தகவல்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com