மானாமதுரை வைகைஆற்றில் பட்டப்பகலிலும் மணல் கொள்ளை

மானாமதுரை வைகைஆற்றில் பகல் நேரத்திலும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
மானாமதுரை வைகைஆற்றில் பட்டப்பகலிலும் மணல் கொள்ளை
Published on

மானாமதுரை,

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளை மறுபடியும் தலை தூக்க தொடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் மானாமதுரை வைகைஆற்றில் சமீபகாலமாக மணல் கொள்ளை சம்பவம் அதிகஅளவில் நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் போலீசாரும் கண்டும், காணாமல் இருப்பதால் இந்த பகுதியில் மணல் கொள்ளை இரவு நேரங்களில் மும்முரமாக நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இதற்கு முன்பு மானாமதுரை வைகைஆற்றில் இரவு நேரங்களில் மட்டும் வைகைஆற்றுக்குள் மணல் லாரிகள் இறங்குவதற்கு வசதியாக கட்டைகள் அடுக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வைகைஆற்று பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பகல் நேரத்தில் கூட மணல் கொள்ளை மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து அந்தபகுதி மக்கள் கூறியதாவது:- மானாமதுரை வேதியரேந்தால் அருகே வைகைஆற்றுக்குள் பகல் நேரத்தில் கூட ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.

அந்த காட்சிகள் தற்போது மானாமதுரை பகுதியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வைகைஆற்றில் கூட்டுக்குடிநீர் செல்லும் இடங்களில் கூட இந்த கும்பல் மணலை அள்ளி வருவதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த மணல் கொள்ளை சம்பவத்திற்காக வைகைஆற்றில் லாரிகள், டிராக்டர்கள், ஜே.சி.பி. எந்திரம் தடையின்றி இறங்குவதற்கு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக மணல் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில்தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் அழியும் நிலை உள்ளது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் இந்த மணல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com