

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஊருணியில் மூழ்கி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கல்லூரி மாணவன்
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நெடுங்கரைப்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 20). பி.காம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு முத்துக்குமார் தனது நண்பர்களுடன் பாட்டியம்மன் கோவில் ஊருணிக்கு குளிக்க சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஊருணியில் உள்ள சகதியில் சிக்கி முத்துக்குமார் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் தீயணைப்புதுறையினர் உதவியுடன் நீரில் மூழ்கிய முத்துக்குமாரின் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனை
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊருணியில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.