தடகளத்தில் தடம் பதித்த சம்யுக்தா


தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 19 Jun 2022 1:30 AM GMT)

மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக முதலிடம் பெற்றேன். 2012-ம் ஆண்டு கோவையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டியில் 14-வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில், நீளம் தாண்டுதலில் நான் படைத்த 5.29 மீ சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.

"நம்மால் முடியாது என்று நினைத்து முடங்கிக் கிடக்காமல், தடைகளை உடைத்து சாதிக்கும் மனப்பான்மையை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் சம்யுக்தா. சிவகாசியில் பிறந்த இவர், தடகளத்தில் பல சாதனைகள் படைத்து வருகிறார். அவரது பேட்டி.

உங்களைப் பற்றி?

என் அப்பா சிவக்குமார் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். அம்மா சீத்தா குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். எனது குடும்பம் கோவையில் குடியேறியதால் ஆரம்பக் கல்வியை அங்கு படித்தேன். பின்னர் மதுரையில் உயர்நிலை கல்வி முடித்தேன். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. சைக்காலஜி படித்தேன். தற்போது எம்.எஸ்சி. சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

தடகளத்தில் ஈடுபட ஆரம்பித்தது எப்போது?

3-ம் வகுப்பு படிக்கும் போது மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் 20 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போட்டியில் நான் முதல் 10 இடங்களுக்குள் வந்தேன். அதன் பிறகு 5-ம் வகுப்பில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்.

போட்டிகளில் பங்கேற்கும்போது நடந்த மறக்க முடியாத தருணம்?

சென்னையில் 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று 12-வது இடத்தைப் பிடித்தேன். அதில் நான் மட்டுமே குறைந்த வயதுடைய மாணவி. அந்தப் போட்டி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. அதுவே என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

உங்கள் சாதனைகள் பற்றி சொல்லுங்கள்?

மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக முதலிடம் பெற்றேன். 2012-ம் ஆண்டு கோவையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டியில் 14-வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில், நீளம் தாண்டுதலில் நான் படைத்த 5.29 மீ சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்க வில்லை. கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறேன். தடகள போட்டிகளில் மாவட்ட அளவில் 210 முறை, மாநில அளவில் 45 முறை, தேசிய அளவில் 8 முறை வென்றுள்ளேன். தற்போது என்னிடம் 50 கோப்பைகளும், 300 பதக்கங்களும் உள்ளன.

கல்வியில் நீங்கள் எத்தகைய மாணவி?

விளையாட்டைப் போலவே கல்வியிலும் நான் முதல் மாணவியாக இருக்கிறேன். அதன் காரணமாக, பள்ளி முதல் கல்லூரி வரை சிறப்பு சலுகை மூலம் இலவசமாகவே படித்து வருகிறேன்.

விளையாட்டில் ஆர்வம் செலுத்தினாலும், மருத்துவர் ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. பின்பு தனியார் கல்லூரியில் சைக்காலஜி பிரிவில் வாய்ப்பு கிடைத்தது.

இதுவும் மருத்துவத்துக்கு இணையான துறை என்பதால் உற்சாகமாக படித்துக் கொண்டிருக்கிறேன். சமூகத்தில் தற்போது அனைவருக்கும் தேவையாக இருப்பது ஆற்றுப்படுத்துதல் (கவுன்சிலிங்) தான். இதன் மூலம் பலரது வாழ்வை மீட்டுக்கொடுக்க முடியும்.

கல்வியோடு, விளையாட்டிலும் ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை படைத்து வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தடகளத்தில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே என் கனவாகும்.

குடும்பத்தின் ஆதரவு எப்படி உள்ளது?

நான் சிறுவயதில் சரியாக சாப்பிட மாட்டேன். அதனால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைவு காரணமாக எனக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போது விரைவாக சோர்ந்து விடுவேன். அந்த நேரத்தில் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். என்னை எல்லாவற்றிலும் உற்சாகப்படுத்தி வழிநடத்தினர்.

என் அம்மா தான் என்னை முதன் முதலாக விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றார். போட்டிக்காக எங்கு சென்றாலும் எனக்கு பக்கபலமாக இருப்பார். நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போதும் 'உன்னால் முடியும்' என்று துணிவும், நம்பிக்கையையும் கொடுப்பார். என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையால்தான் நான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.

உங்களின் வழிகாட்டி யார்?

என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, என்னை வழிநடத்தி வருபவர் என் பயிற்சி ஆசிரியர் ரெகு பாண்டியன். கடந்த 8 வருடங்களாக அவரிடம் பயிற்சி எடுத்து வருகிறேன். விளையாட்டிற்கு தகுந்தாற்போல் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். போட்டியின்போது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து வருகிறார்.

உங்களை போன்ற இளம்பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

பெண்கள் பலவீனமானவர்கள் என்ற தவறான கருத்தை உடைத்து, நம்மாலும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்துப் போராடும் தைரியத்தை பெற வேண்டும். பெற்றோரிடம் நன்றாக ஆலோசித்து எந்த முடிவையும் எடுத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


Next Story