மழைக்காலத்தில் பூஞ்சை வளர்வதை தடுக்கும் வழிகள்

மழைக்காலங்களில் மரச்சாமான்கள் ஈரம் அடைவதைத் தடுக்க, அவற்றை சுவர்களை ஒட்டி வைக்காமல், சில அங்குல இடைவெளிகள் விட்டு வைக்கலாம். வீட்டில் சூரிய ஒளி படாத பகுதிகளில் உலர்ந்த வேப்ப இலைகளைப் போட்டு வைப்பதன் மூலம், பூஞ்சைகள் படர்ந்து வளர்வதைத் தடுக்கலாம்.
மழைக்காலத்தில் பூஞ்சை வளர்வதை தடுக்கும் வழிகள்
Published on

சூடான தேநீர், பிடித்த எழுத்தாளரின் புத்தகம், ஜன்னல் வழியே பெய்யும் மழை இது மூன்றும் வார விடுமுறை நாட்களை இனிமையாக மாற்றும். அதே நேரத்தில், மழைக்காலங்களில் சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். அவற்றில் ஒன்று மரச்சாமான்கள் மற்றும் தரைவிரிப்புகள் மீது பூஞ்சைகள் படர்ந்து வளர்வது. இது அசவுகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், கடினமான கறைகளையும் உண்டாக்கும். அதைத் தடுப்பதற்கான சில வழிகள் இதோ…

ஆரஞ்சு பழங்கள் சுவை மற்றும் ஆரோக்கியம் தருவதோடு மட்டுமில்லாமல், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளைத் தடுப்பதற்கும் உதவும். லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில், இரண்டு முதல் மூன்று ஆரஞ்சு தோல்களைப் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றவும். பாட்டிலை நன்றாக மூடி ஈரப்பதமில்லாத இடத்தில் இரண்டு வாரங்கள் அப்படியே வைக்கவும். பின்பு அதை வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி தேவையான இடங்களில் தெளிக்கவும்.

ஒரு டேபிள் ஸ்பூன் கார்ன் ஸ்டார்ச்சுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் ஊற்றி கலந்து பசை போல மாற்றவும். இதை தரைவிரிப்பில் பூஞ்சை படர்ந்துள்ள இடத்தில் தடவவும். இரண்டு நாட்களுக்கு அப்படியே விட்டு வைக்கவும். பின்பு வாக்குவம் கிளீனர் கொண்டு சுத்தப்படுத்தவும். தரைவிரிப்பில் கறைகள் இல்லாமல் பளிச்சிடும்.

ஈரப்பதத்தால் மரச்சாமான்களில் பூஞ்சை வளர்வதைத் தடுக்க, டர்பென்டைன் மற்றும் ஆளிவிதை எண்ணெய் இரண்டையும் 2:1 என்ற விகிதத்தில் கலக்கவும். மரச்சாமான்களை சுத்தமாக துடைத்துவிட்டு, தயாரித்துள்ள கலவையை மென்மையான துணியின் மூலம் பூசவும். இதனால் பூஞ்சை படர்வதைத் தடுக்கலாம்.

மழைக்காலங்களில் மரச்சாமான்கள் ஈரம் அடைவதைத் தடுக்க, அவற்றை சுவர்களை ஒட்டி வைக்காமல், சில அங்குல இடைவெளிகள் விட்டு வைக்கலாம். வீட்டில் சூரிய ஒளி படாத பகுதிகளில் உலர்ந்த வேப்ப இலைகளைப் போட்டு வைப்பதன் மூலம், பூஞ்சைகள் படர்ந்து வளர்வதைத் தடுக்கலாம். 

X

Daily Thanthi
www.dailythanthi.com