நெய் அப்பம்


நெய் அப்பம், பன்னீர் பாப்கார்ன் செய்முறையை தெரிந்து கொள்வோம்....

தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று நெய் அப்பம். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் மிகவும் பிரபலமானது. இதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும். இதன் செய்முறை தொகுப்பை காணலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 250 கிராம்

தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி

ஏலக்காய் - 4

சமையல் சோடா - ¼ தேக்கரண்டி

வாழைப்பழம் - 1

உப்பு - ¼ தேக்கரண்டி

வெல்லம் - 200 கிராம்

நெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். வாழைப்பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.

ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுக்கவும். இப்போது நெய் அப்பம் தயார்.

பன்னீர் பாப்கார்ன்

வெளியே மொறு மொறு என்றும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும் சுவையான சிற்றுண்டி பன்னீர் பாப்கார்ன். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறை குறிப்பு இதோ...

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - ½ தேக்கரண்டி

சோள மாவு - 5 தேக்கரண்டி

ரொட்டித் தூள் அல்லது

நுணுக்கிய பொறை - 100 கிராம்

பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி அல்லது

புதினா தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி அல்லது புதினா தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார். இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Next Story