கால்களை அழகுபடுத்தும் மீன் ஸ்பா!


கால்களை அழகுபடுத்தும் மீன் ஸ்பா!
x
தினத்தந்தி 10 Sep 2023 1:30 AM GMT (Updated: 10 Sep 2023 1:30 AM GMT)

மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர், அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக அழகுக்கு முக்கியத்துவம் தருவது போலவே பாதங்களின் பராமரிப்பும் முக்கியமானது. பாதங்களை அழகுபடுத்திக்கொள்ளவும், பராமரிக்கவும் பெண்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே பெடிக்யூர் தான். பார்லர்களில் உபகரணங்களை பயன்படுத்தி செய்வது போலவே தற்போது, இந்த முறையை மீன்களை கொண்டும் செய்கின்றனர். அதுதான், மீன் ஸ்பா!

பெரிய மால்கள், பார்லர்கள் என ஆண்-பெண் வேறுபாடு இல்லாமல் இந்த மீன் ஸ்பா பிரபலமாகி வருகிறது. அது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

மீன் ஸ்பா என்றால் என்ன?

மீன் ஸ்பா என்பதை மீன் பெடிக்யூர் என்றும் சொல்லலாம். ஒருவர் தனது கால்களை மீன்கள் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் வைக்கும்போது கால்களை, மீன்கள் சுத்தம் செய்யத் தொடங்கும். இதற்கு, கர்ரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர். இவை கால்களை சுத்தப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம். இதற்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதன்முதலில், துருக்கியில்தான் இந்த மீன் ஸ்பா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிரியா, ஜோர்டன், இஸ்ரேல், ஈராக் உட்பட பல்வேறு நாடுகளில் பிரபலமான இது தற்போது, இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. மீன்களைத் தவிர இதில் வேறு எந்த உபகரணங்களோ, கிரீம் போன்றவையோ பயன்படுத்தப்படுவதில்லை.

மீன் ஸ்பாவின் நன்மைகள்:

முறையாக சுத்தம் செய்யப்படாத பாதத்தில் பாத வெடிப்பு, அலர்ஜி உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதில் பல இறந்த செல்கள் தேங்கும். நம் கால்களில் உள்ள இறந்த செல்கள் தான் மீன்களின் பிரதான உணவு என்பதால் அவற்றை முழுமையாக நீக்க மீன் ஸ்பா சிறந்தது.

கர்ரா ரூபா மீனுக்கு, 'டாக்டர் பிஷ்' என்ற பெயரும் உண்டு. ஏனெனில், இது நம் காலில் உள்ள வறண்ட சருமத்தை சரி செய்து, புத்துயிர் அளிக்கிறது. எக்ஸிமா, சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. மீன்கள், நம் கால்களில் சிறந்த அழுத்தத்தை கொடுத்து, நுணுக்கமாக மசாஜ் செய்கிறது. இதனால் நம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது.

தண்ணீர் தொட்டியில் கால்களை வைக்கும்போது பல மீன்கள் நம் கால்களை கடிக்கும். இது நமக்கு வலிக்காமல் கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கும். உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும். இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும்.

சிலருக்கு பல்வேறு காரணங்களால் கால் கரடுமுரடாக இருக்கும். அவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்ளும்போது காலில் உள்ள இறந்த செல்கள் மட்டுமின்றி, சரும வறட்சியும் நீங்கும். இதனால், கால்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு, கடுமையான தோல் மென்மையாக மாறும். பாத எரிச்சலும் நீங்கும்.

நன்மைகள் பல இருந்தாலும் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இதில் உண்டு. கடுமையான தோல் நோய்த் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

அதேபோல், மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர், அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Next Story