ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பு


ஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பு
x
தினத்தந்தி 2 April 2023 1:30 AM GMT (Updated: 2 April 2023 1:31 AM GMT)

இல்லத்தரசிகள் மற்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், எளிதாக தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்றது ‘ஆர்கானிக் ரோஜா எண்ணெய்’.

சாயனம் சேர்க்காமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்களுக்கும், வீட்டுத் தயாரிப்புகளுக்கும் தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இல்லத்தரசிகள் மற்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், எளிதாக தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் ரோஜா எண்ணெய்'.

முதலில் இதை சிறிய அளவில் தயாரித்து உபயோகப்படுத்தி பாருங்கள். பிறகு இதன் பயன்களைக் கூறி நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விற்பனை செய்யலாம். இதன் மூலம் பலன் அடைபவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள். 'ஆர்கானிக் ரோஜா எண்ணெய்' தயாரிப்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

ஆர்கானிக் ரோஜா பூக்கள் - 2 கப்

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் - ¾ கப்

செய்முறை:

ஆர்கானிக் ரோஜா பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவற்றை தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்துங்கள். அந்த ரோஜா இதழ்களை மெல்லிய பருத்தித் துணியில் போட்டு ஈரம் நீங்கும் வரை உலர்த்துங்கள்.

பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக் கொள்ளுங்கள்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றுங்கள். பின்பு அதனுடன் ரோஜா விழுதை சேர்த்து மிதமான தீயில் கிளறுங்கள்.

சிறிது நேரம் கழித்து ரோஜா இதழ்களின் நிறம் மாறி, எண்ணெய் பிரிந்து மேலே நிற்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். பாத்திரத்தை ஒரு வலைத்தட்டு போட்டு மூடி வையுங்கள். (சாதாரண தட்டு கொண்டு மூடினால், நீராவித்துளிகள் எண்ணெய்யில் கலந்துவிடும்.) இதனை 5 முதல் 6 மணி நேரத்துக்கு அப்படியே வைத்து விடுங்கள்.

பிறகு சுத்தமான பருத்தி துணியைக் கொண்டு எண்ணெய்யை வடிகட்டி, கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

ஒரு பங்கு ரோஜா எண்ணெய்யுடன், 10 பங்கு தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தவும்.

குறிப்பு: ரோஜா இதழ்கள் கருகிவிடாமல் எண்ணெய்யை கவனமுடன் காய்ச்ச வேண்டும்.

நன்மைகள்:

ஆர்கானிக் ரோஜா எண்ணெய்யை குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு உபயோகிக்கலாம். இது சருமம் மற்றும் கூந்தல் வறட்சி அடைவதைத் தடுக்கும். கண்களுக்கு கீழ் படரும் கருவளையத்தை நீக்கும். புருவ முடிகளை அடர்த்தியாக்கும். நகங்களுக்கு உறுதியும் பளபளப்பும் அளிக்கும். சருமத்தின் சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றம் தரும்.


Next Story