ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கரும்புச்சாறு


ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கரும்புச்சாறு
x
தினத்தந்தி 12 Feb 2023 1:30 AM GMT (Updated: 12 Feb 2023 1:30 AM GMT)

காலை உணவோடு ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகினால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். காபிக்கு மாற்றாக கரும்புச்சாறு பருகுவது உடலுக்கு நல்லது.

கோடைகாலத்தில், லேசாக குளிர்விக்கப்பட்ட கரும்புச்சாறுடன், எலுமிச்சை மற்றும் இஞ்சிச்சாறு கலந்து பருகினால், உடனடியாக உடல் புத்துணர்ச்சி அடைவதை நம்மால் உணர முடியும். கரும்புச்சாறு நாவிற்கு சுவையூட்டுவது மட்டுமில்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

தண்ணீர், நார்ச்சத்து மற்றும் சுக்ரோஸ் நிறைந்த கரும்புச்சாறு, பாரம்பரிய மருத்துவத்தில் ஆரோக்கிய பானமாக பரிந்துரைக்கப்படுகிறது. கரும்புச்சாற்றில் உள்ள நன்மைகள் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ...

ஆற்றலை அதிகரிக்கும்:

உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான மூலப்பொருளான சுக்ரோஸ், இயற்கையாகவே கரும்புச்சாற்றில் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். செல்களுக்கு போதுமான நீர்ச்சத்தைக் கொடுக்கும். உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். காலை உணவோடு ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகினால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். காபிக்கு மாற்றாக கரும்புச்சாறு பருகுவது உடலுக்கு நல்லது.

செரிமானத்தை சீராக்கும்:

கரும்புச்சாற்றில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், வயிற்றின் அமில காரத் தன்மையை சமநிலைப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து நிறைந்த கரும்புச் சாற்றைக் குடிக்கும்போது, ஜீரண மண்டலம் சுத்தமாகும்.

புற்றுநோயைத் தடுக்கும்:

கரும்புச் சாற்றில் கால்சியம், மாங்கனீசு, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள பிளேவனாய்டு, புற்றுநோயை உண்டாக்கும் வீரியம் மிக்க செல்களுக்கு எதிராகப் போராடும். வாரத்துக்கு 3 முறை ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும்.

இளமையை அதிகரிக்கும்:

கரும்புச்சாற்றில் உள்ள 'கிளைகோலிக் அமிலம்' முகப்பொலிவை அதிகரிக்கும். சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், பிளேவனாய்டுகள், பீனாலிக் அமிலம் ஆகியவை சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து அதை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும். கரும்புச்சாறுடன் தயிர் கலந்து பேஸ் பேக்காக பயன்படுத்தினால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவாகும். முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கி பருக்களைக் குறைக்கும்.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்:

கரும்புச் சாற்றில் உள்ள டையூரிட்டிக் பண்புகள், உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கழிவுகள் மற்றும் தொற்றுகளை நீக்கும். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று வராமல் காக்கும். சிறுநீரகக் கற்கள் உருவாகுவதைத் தடுக்கும். சிறுநீரகங்கள் சீராக செயல்பட உதவும்.

பற்களை பாதுகாக்கும்:

கரும்புச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பற்களை வலுப்படுத்தி, பற்சிதைவைத் தடுக்கும். தொடர்ந்து கரும்புச்சாறு பருகி வந்தால், பற்சிதைவு பிரச்சினையால் ஏற்படும் வாய் துர்நாற்றம் நீங்கும்.


Next Story