குழந்தைகளின் அன்பு எல்லையற்றது - சாதனா


குழந்தைகளின் அன்பு எல்லையற்றது - சாதனா
x
தினத்தந்தி 1 Oct 2023 1:30 AM GMT (Updated: 1 Oct 2023 1:30 AM GMT)

குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில், பேசுவதில், பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். அந்தக் குறைபாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என பல பெண்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரும்பி பார்க்கும்போதுதான், தாங்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கும், சமூகத்துக்காக பங்களிப்பதற்குமான தேவைகள் இருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்து திருமணம் ஆகி 40 வருடங்களுக்குப் பிறகு, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் சாதனா தர்மராஜ். அவருடன் ஒரு சந்திப்பு.

''நான் சிவகாசியில் வசித்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஒரு கட்டத்தில், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் நமக்கான அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்துவது, பள்ளிகளில் ஊக்கமளிக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது என குழந்தைகள் தொடர்பான பணிகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான், ஒருநாள் என் நண்பர்களுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் காப்பகத்திற்குச் சென்றேன். அங்கு எனது கண் முன்னே ஒரு சிறுவனுக்கு வலிப்பு வந்து, என் மடியில் வந்து விழுந்தான். அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் சிறப்பு குழந்தைகளைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

அவர்களுக்கான சிகிச்சைகள் பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன. இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது "சிவகாசியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை" என்றார்கள்.

இந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்தேன். அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் அனைத்தையும் நேரடி மற்றும் இணைய வகுப்புகள் மூலமாக கற்றறிந்தேன். தற்போது இந்தத் துறையில் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில், பேசுவதில், பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். அந்தக் குறைபாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். இது சற்றே சவாலான காரியம்தான். ஆனால் பயிற்சிக்குப் பிறகு அந்த குழந்தைகளின் வளர்ச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது அந்த சவால்கள் ஒரு பொருட்டாகவே தோன்றாது.

குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள். இந்த அன்புதான் என்னை தொடர்ந்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது. எனது செயல்பாடுகளுக்காக 'புதுமைப்பெண் விருது' உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளேன்'' என்றார்.


Next Story