பண்ணாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்.. குன்றுபோல் குவிந்த உப்பு மிளகு கலவை

இன்று ஆடி அமாவாசை என்பதால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
பண்ணாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்.. குன்றுபோல் குவிந்த உப்பு மிளகு கலவை
Published on

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து அம்மனை தரிசிப்பார்கள்.

இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இன்று காலை 5 மணியிலிருந்து பக்தர்கள் அம்மனை தரிசிக்க வரிசையில் நின்றனர். காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட நேரம் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள், வெளியே வந்து தீபமேற்றி வணங்கினார்கள். மேலும் குண்டம் இருக்கும் பகுதியில் உப்பும் மிளகும் கலந்த கலவையை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு அகல் விளக்கு ஏற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் வழிபட்டனர். இவ்வாறு பக்தர்களால் தூவப்பட்ட உப்பு மிளகு கலவையானது, சிறு குன்று போல காட்சியளித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com