திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்... இன்று பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

கோவிலில் இன்று காலையில், ஸ்ரீ மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
உற்சவர்களுக்கு பவித்ர மாலைகள் அணிவிப்பு
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடத்தப்படும். இந்த ஆண்டின் பவித்ரோற்சவம் நேற்று சாஸ்திர சம்பிரதாயங்களுடன் தொடங்கியது. முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை நடந்தது. அதையொட்டி நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை பவித்ர மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு எழுந்தருள செய்து, ஹோமங்கள் உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பின்னர் சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்த னம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேதப் பண்டிதர்கள் பஞ்ச சூக்தங்களை பாராயணம் செய்தனர். தொடர்ந்து பவித்ர பிரதிஷ்டை நடந்தது.

மலையப்ப சுவாமி வீதிஉலா

மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் தங்கத்திருச்சி வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு யாக சாலையில் வைதீக காரிய கர்மங்கள் நடந்தன.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோவில் துணை அதிகாரி லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர் நன்னபனேனி சதாசிவராவ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
கொடிமரத்திற்கு பவித்ர மாலை அணிவிக்கப்பட்ட காட்சி

பவித்ர மாலைகள்

பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையொட்டி அதிகாலையில், ஸ்ரீ மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்குப் பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன.

திருமலையின் ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஸ்ரீ முத்தடா ரவி சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com