திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்

பூஜைகள் முடிந்த பின்னர், கொழுக்கட்டை உடைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்
கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட மெகா கொழுக்கட்டை
Published on

திருச்சி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.

மெகா கொழுக்கட்டை

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் எழுந்தருளியுள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளன்று மாபெரும் கொழுக்கட்டை நிவேதனம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் சமையல் கூடத்தில் தலா 75 கிலோ எடையுள்ள 2 பிரமாண்டமான கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட்டன. இந்த கொழுக்கட்டைகள் இன்று காலை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் கொண்டு செல்லப்பட்டது. தொட்டில் கட்டி சுமந்து செல்லப்பட்ட கொழுக்கட்டையை சுவாமிக்கு படைத்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகள் முடிந்த பின்னர், கொழுக்கட்டை உடைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

பக்தர்கள் குவிந்தனர்

முன்னதாக இன்று காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com