

சேலம்,
சேலம் அம்மாபேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் ஆகியவை நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி முன்னதாக அம்மனுக்கு இளநீர், சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.
கோவில் முன்பு தொடங்கிய இந்த தேரோட்டம் திரு.வி.க. ரோடு, மாரிமுத்து தெரு, செங்கோடன் தெரு, அண்ணாமலை கோவில் தெரு, ஆச்சி முத்து தெரு, எல்லப்பன் தெரு, பண்டரிநாதன் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
தேருக்கு முன்பு இளம்பெண்கள் பலர் கோலாட்டத்துடன், அம்மன் பக்தி பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக வந்தனர். தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) சத்தாபரணம் நடக்கிறது.