ஆடி வெள்ளி: மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள்.. திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விஐபி பக்தர்கள் காலை 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மைசூர் சாமுண்டி மலை, சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்
Published on

மைசூர்,

மைசூர் சாமுண்டி மலை, சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேவிக்கு இன்று அதிகாலை வழக்கம்போல அபிஷேகங்கள், ஆராதனை, அலங்காரம், மகா மங்கள ஆரத்தி பூஜைகள் நடைபெற்றன. ரோஜாப்பூ வர்ணத்தில் பட்டு சேலை மற்றும் ஆபரணகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் அறைகள் மற்றும் வெளிப்பகுதியில் வண்ண வண்ண பூக்களால் பந்தல் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்வதற்காக அதிகாலை 3.30 மணியிலிருந்து ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தபடி குவிந்திருந்தார்கள். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.களுக்கு அதிகாலை 5:30 மணி லிருந்து காலை 10 மணி வரை தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

2000 ரூபாய் கட்டண தரிசனம்

வழக்கம்போல தர்ம தரிசன வரிசை, 2000 ரூபாய் கட்டண தரிசன வரிசை (சிறப்பு விரைவு தரிசனம்) என இரண்டு வரிசைகள் இருந்தன. 2000 ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசனத்திற்கு சென்றவர்கள், கோவிலுக்குள் சென்ற அரை மணி நேரத்திற்குள் தரிசனம் செய்து திரும்பினர். அவர்களுக்கு குடிநீர், டிரை ஃப்ரூட்ஸ், பாதாம் பால், சாமுண்டீஸ்வரி அம்மன் பிரசாதம் ஆகியவை அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.

தர்ம தரிசன வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்ததால், அவர்கள் தரிசனம் செய்ய சில மணி நேரம் ஆனது. ஆடி வெள்ளியை முன்னிட்டு சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com