ஆடிப்பூர உற்சவம்... திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன் தேரோட்டம்

ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கலயாண வைபவம் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது
தேரோட்டம்
Published on

திருக்கழுக்குன்றம்,

திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் ஆடிப்பூர உற்சவத்தின் 7-ம் நாளான இன்று நடைபெற்ற திரிபுரசுந்தரி அம்மன் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த இக்கோவிலில் மலைமீது வேதகிரீஸ்வரரும், தாழக்கோவில் என அழைக்கப்படும் பெரிய கோவிலில் திரிபுரசுந்தரி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் தேவாரம் பாடப்பெற்ற சிறப்புமிக்க சிவத்தலமாக விளங்குகிறது.

ஆடிப்பூர உற்சவம்

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டின் ஆடிப்பூர உற்சவம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் வளாகத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தினமும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு வாகனங்களில் திரிபுர சுந்தரி அம்மன் எழுந்தருளி மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஆடிப்பூர உற்சவத்தின் 7-ம் நாளான இன்று திரிபுரசுந்தரி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுரம் வழியாக வந்த அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து கோயில் அருகே அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதிகளில் திருத்தேர் பவனி வந்தபோது பக்தர்கள் திரளாக திரண்டு நின்று அம்மனை வழிபட்டனர்.

திருக்கலயாணம்

விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்த் திருவையொட்டி திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருகிற 15-ம் தேதி இரவு மூலவர் அம்பாளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவமும், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com