

ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தில் உள்ள சிறுபாத்தம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதையொட்டி ஊரணி பொங்கல் விழா, பால்குட ஊர்வலம் நடந்தது. மேலும் 58 பெண்கள் தீச்சட்டி ஏந்தி கிராமம் முழுவதும் வலம் வந்து அம்மனை வழிபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு லாரி, டிராக்டர், கார், வேன் என பல்வேறு வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
5 பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு லாரியை இழுத்தனர். லாரி மீது 2 பேர் அந்தரத்தில் தொங்கியபடி வலம் வந்தனர். மேலும் சிலர் அந்தரத்தில் தொங்கியபடி பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து மகா தீபாராதனை நடத்தினர். இந்நிகழ்வு பக்தர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்நிகழ்வின்போது பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், எலுமிச்சம்பழம், தாலி கயிறு போன்ற மங்களப் பொருட்களையும் இறைத்தனர். சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.