

ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ‘அசோக வனம்’ இலங்கையின் நுவரெலியா அருகில் உள்ள சீதா எலிய என்ற இடத்தில் அமைந்துள்ளது. அங்கு சீதைக்காக கட்டப்பட்ட அழகிய கோவில் உள்ளது.
ராமாயணத்தில் சீதா தேவியை இலங்கை வேந்தன் ராணவன் கடத்திச் சென்று அசோக வனத்தில் சிறைவைத்திருந்ததும், பின்னர் ராமபிரான் வான சேனையுடன் சென்று போரிட்டு வென்று சீதா தேவியை மீட்டதும் அனைவரும் அறிந்ததே.
சிறைவைக்கப்பட்டிருந்த அந்த தருணத்தில், பகவான் ஸ்ரீராமரை பிரிந்து வனத்தில் சீதா தேவி பட்ட துயரங்களுக்கு அளவே கிடையாது. தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் போன்று யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த இடத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள் சீதா தேவி.
ஆம், அசோக வனத்தில் சீதா தேவிக்காக அழகுற ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் சீதா எலிய என்ற இடத்தில் இக்கோவில் உள்ளது. சீதா தேவியை ராவணன் கடத்தி சிறைவைக்கப்பட்டிருந்த சமயத்தில், சீதையைத் தேடி வந்த அனுமான், அவரை முதன்முதலாக சந்தித்த பகுதியில்தான் தற்போதைய சீதை கோவில் கட்டப்பட்டுள்ளது. அனுமானின் பாதம் என கூறப்படும் அடையாளமொன்று, சீதை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள பாறையில் காணப்படுகிறது. அந்த இடத்தில் சீதையை, அனுமன் சந்தித்தது போன்ற சிலை அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இக்கோவிலின் கருவறையில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணர் ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள். சீதா தேவி, ராம லட்சுமணர்களுடன் அருள்பாலித்தபோதும், அன்னை சீதைக்கே பிரதான வழிபாடு நடைபெறுகிறது. இங்கு அனுமனுக்கு தனிச் சன்னதி உண்டு.
இந்த தலத்தில் அருள்பாலிக்கும் சீதையை வழிபட்டால் பக்தர்களின் குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவே, இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இலங்கை சென்று சீதை அம்மனை வழிபடுகிறார்கள்.
இப்பகுதி அழகிய மலைகள், அருவிகள் மற்றும் பசுமையான மரங்களால் சூழப்பட்டு ஒரு அமைதியான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இலங்கைக்கு சுற்றுலா செல்லும் இந்துக்கள், பசுமையான சூழலுக்கு மத்தியில் சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கும் சீதா தேவியை தரிசனம் செய்து மன நிறைவுடன் திரும்புகிறார்கள்.