

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஆனி அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி 12-ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை தினமான இன்று, தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு அதிகாலை முதல் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என பக்தர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே மலையேறி செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு மதியம் 12 மணிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசை வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.