

சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன விழா முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் நடராஜப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெறும். இந்த மகா அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்வதற்காக அன்றையதினம் சிவாலயங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அவ்வகையில் ஆனி உத்திர நட்சத்திர தினமான இன்று ஆனித்திருமஞ்சன வைபவம் நடைபெறுகிறது. கோவில்கள் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வாகன வீதி உலா நடைபெற்றது.
ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
நாகையில் பிரசித்தி பெற்ற சப்தவிடங்களில் ஒன்றாக நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன (உத்திர நட்சத்திர) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், கரும்புசாறு, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நீலா கீழவீதி, நீலா தெற்குவீதி உள்பட நான்கு வீதிகளில் சுவாமி சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைப்போல நாகையில் உள்ள அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்,கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாத கோவில், வீரபத்திர சாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாத கோவில், சட்டையப்பர் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவில், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரசுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தினை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத அனந்த நடராஜமூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.