சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனியும் நடக்கின்றன.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
ஆவணி திருவிழா கொடியேற்றம்
Published on

தென்தாமரைக்குளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணித் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (21-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது.

தலைமைபதி தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். குரு பால. லோகாதிபதி, குரு.பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது.

நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 31-ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது

விழா நிகழ்ச்சிகள்

நாளை சனிக்கிழமை 22-ம் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் பவனி வருதல், மூன்றாம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை 23-ம் தேதி இரவு அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 24-ம் தேதி அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 25-ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 26-ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல் , 27-ம் தேதி அய்யா கருட வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

8-ம் திருநாளான 28-ம்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது, தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும், தொடர்ந்து அன்னதர்மமும் நடக்கிறது.

29-ம் தேதி அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், 30-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பவனிவரும் நிகழ்சியும் நடக்கிறது.

தேரோட்டம்

11-ம் திருநாளான 31-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் புறப்பட்டு பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன்பின் பக்தர்கள் அய்யாவிடம் இனிமம் பெற்று செல்கின்றனர்.

திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனியும் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com