திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்

விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி பெருமாள் பல்லக்கில் மாட வீதிகள் மற்றும் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டம்
Published on

தென்திருப்பேரை,

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகர்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் எட்டாவது ஸ்தலமாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது. திருக்கோளூர் மதுரகவி ஆழ்வாரின் அவதார ஸ்தலமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டு, 12 நாட்கள் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 11ஆம் தேதி கருட சேவை நடந்தது. இதில் வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

வாகன சேவை

விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி பெருமாள் பல்லக்கில் மாடவீதிகள் மற்றும் ரதவீதிகளில் வீதி உலா வந்தார். இரவு நேரங்களில் பரங்கி நாற்காலி, சிம்மம், அனுமார், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10ஆம் திருநாளான இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு நித்தியல், 6.40 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து 9 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. ‘கோவிந்தா.. கோபாலா..’ என கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் நான்கு ரதவீதிகளிலும் சுற்றி வந்து 10.55 மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன், சுந்தரராசன், நிர்வாக அதிகாரி சதீஷ், அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன், ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com