

சென்னை,
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலையில் உற்சவர் பவளவண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் கோதை நாச்சியாருக்கு (ஆண்டாள்) பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இரவில் ஆண்டாள் கிளி வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல வருடங்கள் கழித்து, கிளி வாகனத்தில் வலம் வரும் ஆண்டாளைக் காண, பக்தர்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் காத்திருந்தனர். ஆண்டாள் வீதி உலா வந்த போது, வீட்டு வாசலில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் வரவேற்று வழிபட்டனர்.
வாகன ஊர்வலத்தின் முன்னால், வாண வேடிக்கைகள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாள் மற்றும் தாயார் வேடமிட்ட கலைஞர்கள் ஊர்வலத்தில் நடந்து வந்து, பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தனர். அவர்களுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.