

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி மாதம் பாரம்பரிய முறைப்படி பகவானிடம் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு ஆனிவார ஆஸ்தானம் என்று பெயர். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆனிவார ஆஸ்தானம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு 14-ம் தேதி காலை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற உள்ளது. ஆகம விதிமுறைபடி பூஜைகள் செய்யப்பட்டு, மூலவர் ஏழுமலையானை வெள்ளைநிற வஸ்திரத்தால் மூடி, அதன்பின் கோவில் முழுவதும் கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தன விழுது, குங்குமம் மற்றும் பிற நறுமண பொடிகள் கலந்த புனித நீர் தெளிக்கப்படும்.
தொடர்ந்து கோவில் மூலவர் கருவறை, தங்கக்கொடி மரம், பலிபீடம், தரைதளம், மேற்கூரை, பூஜை பொருட்கள், தூண்கள் போன்றவற்றை தூய நீரால் கழுவி சுத்தம் செய்யப்படும். தூய்மைப்பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட வெள்ளைநிற வஸ்திரத்தை அகற்றி விட்டு பூஜைகள் செய்யப்படும். அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனிவார ஆஸ்தான நாளில் (ஜூலை 17) காலையில் தங்க வாயில் முன் உள்ள மண்டபத்தில் உபய நாச்சியார்களுடன் மலையப்ப சுவாமியை கருடாழ்வாரை நோக்கி கொலுவாக அமர்த்துவார்கள். விஷ்வக்சேனர் ஒரு தனி மேடையில் தெற்கு நோக்கி கொலுவாக அமர்த்தப்படுவார். அதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்படும். கோவிலில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு படித்துக் காட்டப்படும்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சன நாளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும். ஆனிவார ஆஸ்தான தினத்தன்று, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படும்.