சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சாக்ஷாத்கார வைபவோற்சவம்

விழாவின் இரண்டாம் நாள், அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சாக்ஷாத்கார வைபவோற்சவம்- அனுமந்த வாகன சேவை
அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி
Published on

திருப்பதி,

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் சிறப்பு பூஜைகள், ஸ்நாபன திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை, பல்வேறு வாகன சேவைகள் மற்றும் பக்தி இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல் நாளில் அதிகாலை சுப்ரபாத சேவையுடன் விழா தொடங்கியது. மாலையில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சாக்ஷாத்கார வைபவோற்சவம், அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா
அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி

அனுமந்த வாகன சேவை

விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று காலையில் சுப்ரபாத சேவையுடன் தொடங்கின; அதனைத் தொடர்ந்து தோமாலை சேவை, கொலு மற்றும் பஞ்சாங்க சிரவணம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை ஆகம விதிமுறைகளின்படி பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனக் கலவை, இளநீர் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு, கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை அனுமந்த வாகன சேவை நடந்தது. அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

இந்து தர்ம பிரச்சார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் ஆகியவற்றின் சார்பில் பக்தி இசை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு கருட வாகன சேவை நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com