

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று காலை, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான இன்று காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது.
உற்சவர் மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதி கேலரிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பகவானின் உக்கிரமான அவதார திருக்கோலத்தை தரிசனம் செய்வதற்காக கோவில் வளாகத்திலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
நிகழ்ச்சிகளில் திருமலையின் ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.