பிரம்மோற்சவ விழா இன்று ஆரம்பம்.. மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையான் கோவில்

பிரம்மோற்சவ விழாவின் முன்னோடி நிகழ்ச்சியான 'அங்குரார்ப்பணம்' நேற்று இரவு சம்பிரதாயப்படி நடந்தது.
திருப்பதி பிரம்மோற்சவம், ஏழுமலையான் கோவிலில் மலர்களால் பிரமாண்டமான அலங்காரம்
ஏழுமலையான் கோவிலில் மலர் அலங்காரம்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவிற்காக, கோவில் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 6.21 மணியில் இருந்து 6.35 வரை மீன லக்னத்தில் கருட கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, மாநில அரசின் சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்க உள்ளார்.

அத்துடன், அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆன்மிக அனுபவ மையம், எஸ்.வி. அருங்காட்சியகம், மின்சாரப் பேருந்துகள், நந்தகம் செயலி மற்றும் பக்தர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

திருப்பதி பிரம்மோற்சவ விழா, ஏழுமலையான் கோவிலில் வண்ண மலர்களால் பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
ஏழுமலையான் கோவிலில் மலர் அலங்காரம்

விழாவையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பல வண்ண மலர்களால் தேவலோகம் போன்று பிரமாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழாவின் முன்னோடி நிகழ்ச்சியான 'அங்குரார்ப்பணம்' (விதை விதைத்தல் விழா) நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை சம்பிரதாயப்படி நடந்தது.

தொடர்ந்து ஸ்ரீவாரியின் சார்பில் சேனாதிபதியாக விளங்கும் விஷ்வக்சேனர் கோவில் நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது அவர் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். அத்துடன் அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவில் யாகசாலையில் பூமாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புற்று மண் சேகரித்து, அந்த மண்ணில் நவதானியங்கள் விதைக்கப்பட்டன. வைகானச ஆகம முறைப்படி அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com