

திருப்பதி,
திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாள் இரவில் பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று காலை 8 மணிக்கு கோதண்டராமர் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
கோவில் யானைகள் முன்னால் செல்ல, பஜனை கோஷ்டியினர் பஜனை பாடியபடி சென்றனர். மேலும் கோலாட்டம், பரத நாட்டியம் என கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். திருமலை சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி நாகரத்தினா, உதவி அதிகாரி ரவி, கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் வாகன சேவையில் கலந்துகொண்டனர்.
வாகன சேவையைத் தொடர்ந்து, காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமி மற்றும் ஸ்ரீ சீதா, ஸ்ரீ லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனத்தூள் மற்றும் இளநீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.