

சென்னை,
சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜசுவாமி - வடிவுடையம்மன் திருக்கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சைவ சமயத்தின் பெருமைமிகு நாயன்மார்களான சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கான குருபூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மலர்கள், பட்டாடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து அருள் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற முக்கிய நிகழ்வாக, சுந்தரமூர்த்தி சுவாமியும் சேரமான் பெருமாள் நாயனாரும் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, திருக்கோவில் நான்கு மாடவீதிகளிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர்கள் தூவி, தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சுந்தரமூர்த்தி சுவாமியும் சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலாயம் சென்ற தெய்வீக வரலாற்றை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.