சித்ரா பவுர்ணமி: தி.மலையில் 2-வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

நேற்று இரவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
சித்ரா பவுர்ணமி: தி.மலையில் 2-வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், சித்ரா பவுர்ணமியின் போதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு சுமார் 9.52 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலிலேயே திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வர தொடங்கினர். நேற்று காலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

விடிய விடிய கிரிவலம்

நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. சித்ரா பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பகலில் கிரிவலம் செல்லும் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. மாலைக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிரிவலப்பாதையில் காணும் இடமெல்லாம் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் வாங்கி சாப்பிட்டனர். இரவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கூட்டம் மிகவும் அதிக அளவில் இருந்ததால் பக்தர்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்தபடி நடந்து சென்றனர். இதனால் கிரிவலம் சுற்றி வர பக்தர்களுக்கு வழக்கத்தை விட தாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

சித்ரா பவுர்ணமி இன்று இரவு 11.08 மணி வரையில் உள்ளதால் இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போக்குவரத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் முக்கிய பிரகாரங் கள், கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். கோவிலின் வளாகத்திற்குள் மட்டுமின்றி கிரி வலப்பாதையிலும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீஸ் உதவி மையங் கள் அமைக்கப்பட்டு ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. 16 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வச திகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் திருவண்ணாமலைக்கு பல்வேறு பகு திகளில் பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கார், வேன் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com