

கோவை:
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. உற்சவ அம்மன், மண்டபத்தில் எழுந்தருளியதும் திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. திருக்கல்யாணத்தை தொடர்ந்து அம்மனுக்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை அதிகாலையில் உற்சவர் கோனியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்லக்கில் எழுந்தருளி ராஜவிதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு வந்தடைகிறார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும், மதியம் 2.05 மணியளவில் தேரோட்டம் தொடங்குகிறது.