திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் செப்டம்பர் 21ந்தேதி நடைபெற உள்ளது.
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
கொடியேற்றம்
Published on

கடலூர்,

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிகர் பிரம்மோற்சவம்

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் பிரசித்தி பெற்ற தேசிகர் சன்னதி உள்ளது. இங்கு வருடந்தோறும் தேசிகர் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறை உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கொடியேற்றம்

இன்று (13-ந் தேதி) காலையில் பெருமாள் மற்றும் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, அவர்கள் முன்னிலையில் பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றப்பட்டது. அதன்பின் தேசிகருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

17ஆம் தேதி காலையில் தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், மாலையில் வெள்ளி சிம்ம வாகனத்திலும், 18ஆம் தேதி வெண்ணைத்தாழி திருக்கோலத்திலும், இரவு யானை வாகனத்திலும், 19ஆம் தேதி காலை மஞ்சள் நீர் வசந்த உற்சவமும், இரவு தங்க விமானத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. 20ஆம் தேதி தங்க பல்லக்கில் பேட்டை உற்சவம், இரவு வெள்ளிக்குதிரை வாகன ஊர்வலம் நடைபெறுகின்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 21ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5.55 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பின்னர் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபடுகிறார்கள். 10-ம் நாள் திருவிழாவில் ரத்தனாங்கி சேவை, கோவில் எதிரில் உள்ள மலையில் ஹயக்ரீவர் சன்னதியில் நடைபெற உள்ளது.

தேவநாத சுவாமி, தாயார், தேசிகர் புறப்பட்டு மலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் இரவு கண்ணாடி பல்லக்கில் வீதி உற்சவம் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி தங்கப்பல்லக்கில் வீதி உலாவும், இரவு தெப்ப உற்சவமும், 24-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com